ஐகோர்ட்டு தீர்ப்புக்கு வக்கீல்கள் வரவேற்பு!.கோர்ட்டு புறக்கணிப்பை கைவிடுவது பற்றி இன்று முடிவு அறிவிப்பு!. ![]() சென்னை, மார்ச் 19- சென்னை ஐகோர்ட்டு மோதல் சம்பவத்தில் 2 உயர் போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கோர்ட்டு புறக்கணிப்பை கைவிடுவது பற்றி இன்று முடிவு செய்கிறோம் என்று வக்கீல் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தெரிவித்தார். சென்னை ஐகோர்ட்டுக்குள் வக்கீல்களும், போலீசாரும் மோதிக் கொண்ட வழக்கில் 2 உயர் போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஐகோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பு பற்றி சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் கூறியதாவது:- சென்னை ஐகோர்ட்டு வளாகத்திற்குள் போலீசார் அத்துமீறி புகுந்து தாக்கிய வழக்கில் அளிக்கப்பட்டு உள்ள தீர்ப்பு, காலதாமதமாக எங்களது நியாயமான போராட்டத்தை கோர்ட்டு புரிந்து கொண்டாலும் கோர்ட்டின் கண்ணியத்தையும், மாட்சிமையையும் காப்பாற்றிய பெருமை எங்களுக்கு உண்டு என்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். வக்கீல்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்ததன் விளைவே இந்த உத்தரவு ஆகும். அதே சமயத்தில் போலீஸ் செய்த தவறுக்காகவே இரண்டு உயர் போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். இது எங்களது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இந்த வழக்கில் முழு வெற்றி பெறுவதற்காக சட்டத்தின் வாயிலாக தொடர்ந்து போராடுவோம். ஆனால், கோர்ட்டு புறக்கணிப்பை தொடர்வதா? கைவிடுவதா? என்பது பற்றி இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் மாநில அளவிலான பேரணிக்குப் பிறகு வக்கீல்களின் போராட்டக் குழு கூடி முடிவெடுத்து அறிவிக்கும். தமிழக காவல்துறையைக் கண்டித்தும், வக்கீல்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும்தான் இந்தப் பேரணியை நடத்துகிறோம். பேரணியின் முடிவில் கவர்னரை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை. இவ்வாறு பால்கனகராஜ் கூறினார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |