"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

இன்று பா.ஜ.க, தேர்தல் பிரசாரம் துவக்கம்




நாகர்கோவில்: மார்ச் 7.

பா.ஜ.,வின் தேர்தல் பிரசாரத்தை கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி இன்று நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் துவங்கி வைத்துப் பேசுகிறார்.லோக்சபாத் தேர்தலின் போது பா.ஜ.,வின் பிரசாரம் தென்கோடி முனையில் துவங்கப்படுகிறது. 1998, 1999 மற்றும் 2004ம் ஆண்டு தேர்தல்களில் பிரசாரம் குமரி மாவட்டத்திலிருந்து தான் துவங்கப்பட்டது. அதுபோல இந்த ஆண்டும் பா.ஜ., பிரசாரம் நாகர்கோவிலில் துவங்குகிறது.

நாகராஜா திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் அத்வானி பிரசாரத்தைத் துவங்கி வைத்துப் பேசுகிறார். இதில், கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், பொதுச் செயலர் திருநாவுக்கரசர், மாநிலத் தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.அத்வானி வருகையை ஒட்டி, நாகர்கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்திலிருந்து மதியம் 12.30 மணிக்கு நாகர்கோவில் வரும் அவர், சுவாமித்தோப்பு ஐயா வைகுண்டர் தலைமைப்பதிக்குச் செல்கிறார். பின் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர், மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

திருவனந்தபுரத்திலிருந்து கார் அல்லது ஹெலிகாப்டரில் வரும் வகையில் இரண்டு வகையான பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் ஹெலிகாப்டர் பயணத்திட்டம் மட்டும் வகுக்கப்பட்டிருந்ததால் மோசமான வானிலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. அதனால் இந்த முறை இரண்டு வகையான பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

கூட்டம் நடக்கும் மைதானத்தில் மூன்றடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டி.ஐ.ஜி., கண்ணப்பன் இவற்றை நேற்று ஆய்வு செய்தார். டில்லியிலிருந்து கமாண்டோ படையினரும் நாகர்கோவில் வந்துள்ளனர்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections