"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.


ஆதவன் - திரை விமர்சனம்






























கொலை கும்பலிடம் இருந்து நீதிபதி தந்தையை காப்பாற்ற போராடும் ரவுடி இளைஞன் கதை...

கொல்கத்தாவில் குழந்தைகளை கொன்று உடல் உறுப்புகளை கடத்துகிறது ஒரு கும்பல். அந்த வழக்கை நீதிபதி சுப்பிரமணியத்தின் ஒரு நபர் கமிஷன் விசாரிக்கிறது. அவரை தீர்த்துகட்ட எதிரிகள் திட்டமிடுகின்றனர். பணத்துக்கு கொலைகள் செய்யும் ஆதவனிடம் பொறுப்பை ஒப்படைக்கின்றனர்.

ஆதவன் நீதிபதியை சுடும்போது குறி தவறுகிறது. போலீஸ் உஷாராகி நீதிபதிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கின்றனர். இதனால் சமையல்காரனாக நீதிபதி வீட்டுக்குள் நுழைகிறான். அங்குள்ள பெண்கள், குழந்தைகளிடம் நல்லவனாக நடிக்கிறான். எல்லோருக்கும் அவனை பிடிக்கிறது. நீதிபதி தங்கை மகள் தாரா அவன் மேல் காதல் வயப்படுகிறாள். காருக்கு அடியில் வெடிகுண்டு பொருத்துகிறான். அதில் நீதிபதி தப்புகிறார். பிறகு கிட்டாருக்குள் டைம்பாம் வைத்து கார் டிக்கியில் பொருத்தி வெடிக்க வைக்கிறான். அதிலும் நீதிபதி சாகவில்லை.

வில்லன் கூட்டம் நீதிபதியை கொல்ல நேரடியாய் களம் இறங்குகிறது.

அப்போது சிறு வயதில் வீட்டை விட்டு ஓடிப்போன நீதிபதி மகன் நான் தான் என பிரகடனப்படுத்தி தந்தையை காப்பாற்ற அதிரடியாய் இறங்குகிறான் ஆதவன். அதில் வென்றானா என்பது கிளைமாக்ஸ்...

ஆதவனாக வரும் சூர்யா எதிரிகளை கொத்து கொத்தாய் சுட்டுத்தள்ளியும் இடியாய் தாக்கியும் ஆக்ஷனின் சிகரம் தொடுகிறார். சாமியாரை தண்ணீருக்குள் இருந்து போட்டுத் தள்ளுவது பரபர...

வடிவேலுவை கைப்பாவையாய் வைத்து நீதிபதியை கொல்ல திட்டங்கள் வகுப்பதும் அதிலிருந்து அவர் தப்புவதும் சுவாரஸ்யம். பிளாஷ்பேக்கில் பத்து வயது சிறுவனாக வந்து பிரமிக்க வைக்கிறார். கிளைமாக்சில் ஹெலிகாப்டரில் தொங்கி எதிரிகளுடன் மோதுவது ஹாலிவுட் ரகம்.

நயன்தாரா அழகான காதலி. நடிப்புக்கு வாய்ப்பு இல்லாமல் வந்து போகிறார். சரோஜாதேவி நீண்ட இடைவெளிக்கு பிறகு மறு பிரவேசம் எடுத்துள்ளார். அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா, பாடலில் பழைய நினைவுக்கு இழுக்கிறார்.

வடிவேலு காமெடி பலம். வேன் அடியில் குண்டு இருப்பதை தெரிந்து வைத்துள்ள அவரை கட்டாயப்படுத்தி அதே வேனில் ஏற்றியதும் உயிருக்கு பயந்து செய்யும் அலப்பறைகள் வயிற்றை புண்ணாக்குகிறது. கிட்டாருடன் நயன்தாராவை சுற்றும் ரமேஷ்கண்ணா சிரிப்பூட்டுகிறார்.

படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், கே.எஸ். ரவிக்குமார் இருவரும் நீதிபதி வீட்டில் வேலைக்காரர்களாக ஆஜராகும் கடைசி காட்சி தமாஷ். ஆக்ஷன், குடும்ப சென்டி மெண்ட், காமெடியில் விறு விறுப்பாக காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்.

ராகுல்தேவ், சாயாஷி ஷிண்டே வில்லனத்தில் மிரட்டுகின்றனர். நீதிபதியாக வரும் ரவி, அலெக்ஸ், சத்யன், மனோபாலா, ஈரோடு சவுந்தர் கேரக்டர்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டு உள்ளன. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஹிசிலி பிசிலியே, ஏனோ ஏனோ பனித்துளி பாடல்கள் இனிமை. கணேஷ் ஒளிப்பதிவில் பிரமாண்டம்.

Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9043023578
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections